#திருச்சியில்_ஒரு_வரலாற்று_ஆவணம்!
..........................................
மு.தமிமுன் அன்சாரி
..........................................
அரபு மண்ணில் உதித்த இஸ்லாம், இந்தியாவுக்கு முதலில் தென்னிந்தியாவின் வழியாகவே நுழைந்தது.
DISCOVERY OF INDIA என்ற நூலில் ஜவஹர்லால் நேரு அவர்களும் இதை குறிப்பிட்டிருக்கிறார்.
கேரள மற்றும் தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளில் வணிகம் செய்து வந்த அரபுகளின் வழியாகவே இஸ்லாம் இந்திய மண்ணுக்கு அறிமுகம் ஆகியது.
வட இந்தியாவுக்கு வரும் முன்பே தென்னிந்தியாவுக்கே இஸ்லாம் முதலில் வந்தது.
கேரளாவின் கொடுங்கலூரில்தான் இந்தியாவின் முதல் பள்ளிவாசல் கட்டப்பட்டது.
சேரமான் பெருமான் என்ற சேர மன்னன் தன்னை தாஜுதீன் என பெயர் மாற்றிக்கொண்டு இஸ்லாத்தை தழுவினார்.
அவர் மெக்காவுக்கு சென்று திரும்பும் வழியில் இன்றைய ஓமானில் உள்ள 'சலாலா ' என்ற மலையடிவாரத்தில் உயிர் நீத்தார்.
அங்கு அவரது வரலாறும், கல்லறையும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அந்த மன்னரின் உத்தரவின் பேரிலேயே கேரளாவின் கொடுங்கல்லூரில் முதல் பள்ளிவாசல் கட்டப்பட்டது.
மாலிக் பின் தீனார் (ரஹ்) உள்ளிட்டோரின் வருகையும் அப்போதுதான் நடந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டம் துறையூரில்தான் முதல் பள்ளிவாசல் கட்டப்பட்டது.
அன்றைய தமிழகத்துக்கும், அரபுகளுக்கும் இருந்த வணிக உறவுகளின் வழியாகவே இஸ்லாம் இந்த மண்ணுக்கு வந்தது.
கி.பி. 925 - 950 ஆம் ஆண்டுகளில் இஸ்லாமிய பரப்புரக்கைக்காக நத்தர்ஷா (ரஹ்) அவர்கள் மெக்கா - மதினா புனிதப்பயணத்தை முடித்து விட்டு, கர்நாடகா மாநிலம் மங்களூர் - பட்கல் வழியே திருச்சிக்கு வருகை தந்துள்ளார்.
அப்போது அப்பகுதியை ஆண்ட சோழ மன்னர் சுந்தர சோழருக்கும், இவருக்கும் இடையிலே நல்லுறவு ஏற்பட்டிருக்கிறது.
இவரது ஆன்மீக பரப்புரையின் காரணமாகவும், இவரின் சேவைகளின் காரணமாகவும் பலரும் கூட்டம், கூட்டமாக இஸ்லாத்தை ஏற்றிருக்கின்றனர்.
அவர் கி.பி. 1006 ஆம் ஆண்டு இறக்கவும், அவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் தர்ஹாவாக கட்டப்பட்டிருக்கிறது.
கடந்த 25.10.2025 அன்று நான் அந்த தர்ஹா வளாகத்தில் மஜக சார்பில் ஏழை பயனாளிகளுக்கு போர்வைகள் வழங்கிடும் நிகழ்ச்சிக்கு சென்று இருந்தபோது, முதல் முறையாக அந்த தர்ஹாவிற்கு சென்று அந்த வரலாற்றை கேட்டறிந்தேன்.
ஒரு வரலாற்று மாணவன் என்ற அடிப்படையில் இது போன்ற தகவல்களை நான் சேகரித்து வருகிறேன்.
அந்த தர்ஹாவின் உள் கட்டிட அமைப்பு பாரசீக கட்டிடக்கலை நுட்பத்தை சார்ந்து இருந்தது.
அப்போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கைகளால் எழுதப்பட்ட குர்ஆனை காட்டினார்கள்.
முழு குர்ஆனும் நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டு இருந்தது.
இந்த அரிய பழமையான குர்ஆன் பிரதியை வரலாற்று ஆவணமாக தொடர்ந்து பாதுகாப்போடு வைத்திருங்கள் என்று கூறினேன்.
அந்த தர்ஹாவில் இறை பணி சேவகர் நத்தர்ஷா (ரஹ்) அடக்கம் செய்யப்பட்ட உட்புறத்தில், சோழப்பேரரசி குந்தவை நாச்சியார் (மாமா ஜிக்னி) அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தையும் காட்டினார்கள்.
கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலில் குந்தவை நாச்சியார் குறித்த சம்பவங்கள் கூறப்பட்டிருக்கிறதை பார்த்திருக்கிறேன்.
அவர் இஸ்லாத்தை ஏற்ற ஊர்தான் 'சமயபுரம்' என இப்போது அழைக்கப்படுகிறது.
அதாவது 'சமயம் மாறிய புறம்' என்பது இதன் அர்த்தமாம்.
அந்த வரலாறு பரவலாக பேசப்படுவதில்லை.
இது குறித்து பேராசிரியர் அசத்தியநாதன் அவர்கள் ஒரு விரிவான நூலை எழுதியிருக்கிறார்.
சமீபத்தில் 'பொன்னியின் செல்வன்' என்ற நாவல் திரைப்படமாக வந்தபோது, அது பற்றிய விவாதங்கள் எழுந்தது.
அப்போது குந்தவை நாச்சியார் இஸ்லாத்தை ஏற்றதற்கான காரணங்கள் குறித்தும் விரிவாக அலசப்பட்டது.
சிலர் அவர் இஸ்லாத்தை ஏற்கவில்லை என்றும் வாதிட்டு வருகின்றனர்.
அக்காலத்தில் சோழ பேரரசில் குழப்பங்களை செய்த 'உயர்சாதி' குழுவினரின் நடவடிக்கைகள் பிடிக்காமல் அவர் இஸ்லாத்தை ஏற்றார் என்ற செவிவழி செய்தியும் உள்ளது.
குறிப்பாக தனது அண்ணன் ஆதித்ய கரிகாலனின் மரணத்தில் அக்குழுவின் மீது அவருக்கு எழுந்த கோபம் தீராமல் இருந்ததாலும், அச்சமயத்தில் இறைபணி சேவகர் நத்தர்ஷா (ரஹ்) அவர்களின் ஆன்மீக போதனைகளில் அவர் வெகுவாக ஈர்க்கப்பட்டதும் அவரது மதமாற்றத்திற்கு காரணங்களாகவும் கூறப்படுகிறது.
அதுபோல் இங்கு அடக்கம் செய்யப்பட்டு இருக்கும் இறைபணி சேவகர் நத்தர்ஷா (ரஹ்) அவர்களுக்கும், சோழ மன்னர்களுக்கும் இடையிலே இருந்த உறவுகள் குறித்தும் அங்கு விளக்கினார்கள்.
குந்தவை நாச்சியார் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றாலும், ஆட்சி செய்யும் குடும்பத்தை சேர்ந்தவர் என்ற அடிப்படையில் சைவம், வைணவம், பௌத்தம் உள்ளிட்ட மதங்களுக்கும் தொடர்ந்து உதவிகளை செய்து வந்துள்ளார்.
இவரது தம்பி ராஜராஜ சோழனும், அவரது மகன் ராஜேந்திர சோழனும் தங்களது ஆட்சி காலத்தில் இந்த தர்ஹா வளாகத்தை பாதுகாக்கப்பட்ட ஒரு பகுதியாக பேணி வந்துள்ளனர்.
இது சோழ மன்னர்கள் பின்பற்றி வந்த சமய நல்லிணக்கத்தை உணர்த்துவதோடு, அதை உறுதியும் செய்கிறது.
நத்தர்ஷா (ரஹ்) அவர்கள் கர்நாடகாவின் மங்களூர் பகுதியில் இருந்து இங்கு வருகை தந்த காரணத்தினால், இப்போதும் கர்நாடகாவை சேர்ந்தவர்களின் வருகை இந்த தர்காவில் கணிசமாக இருக்கிறது.
தமிழ்நாட்டின் பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்களும் இங்கு வந்து செல்கிறார்கள்.
இங்கு வருகை தரும் சகோதர சமூக மக்களிடம் இஸ்லாம் குறித்தும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்தும் உள்ள நூல்களை இலவசமாக விநியோகியுங்கள் என்றும், அது மேலும் புரிதலை - நட்பை ஏற்படுத்த வழி வகுக்கும் என்றும் அங்குள்ள தர்ஹா நிர்வாகிகளிடம் கூறினேன்.
இங்கு நடைபெறும் சில சடங்குகளில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளது.
ஆனால் இங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களின் வரலாறும், சேவைகளும் முறையாக ஆவணப்படுத்தப்பட வேண்டியது இன்றைய காலத்தில் அவசியமாகிறது.
ஏனெனில் கட்டுக்கதைகளும், தேவையற்ற சடங்குகளும் தவிர்க்கப்பட இது உதவும்.
முற்காலத்தில் இப்படிப்பட்ட இறை பணி சேவகர்கள் தமிழ் மண்ணில் செய்திட்ட பல அறப்பணிகள் வரலாறாக தொகுக்கப்படாமல் இருக்கிறது.
இவர்கள் மட்டுமா இறை சேவகர்கள்? இவர்களுக்கு எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? என்ற விவாதங்களுக்கும், வரம்பு மீறிய சடங்குகளுக்கும் மத்தியில் இவர்களது வருகையின் நோக்கமும், வரலாறும் காணாமல் போய்விட்டது.
வழிபாடு வேறு; வரலாறு வேறு என்ற புரிதலோடு இவை யாவும் ஆவணங்களாக தொகுக்கப்பட்டு, அடுத்த தலைமுறைகளுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும்.
ஏனெனில் வரலாறு என்பது சம்பவங்களின் தொகுப்பாகும்.
அதில் விருப்பு, வெறுப்புகளுக்கு இடமில்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக